விசா இல்லாமல் வருவதற்கான அனுமதியை 6 நாடுகளுக்கு வழங்கியுள்ளது சீன அரசாங்கம். சுற்றுலா மற்றும் வணிகத்தை மேம்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனாவில் இருந்து 2019ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் அடுத்த சில ஆண்டுகள் உலக நாடுகளையும் அவற்றின் பொருளாதாரத்தையும் ஆட்டம் காண வைத்தது. இதனால் இலங்கை உள்ளிட்ட சுற்றுலாவை மட்டும் நம்பியுள்ள நாடுகளின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இதனால் சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளை கவரவும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.இலங்கை உள்பட சில நாடுகள் விசா இல்லாமல் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரலாம் என அதிரடியாக அறிவித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது சீனாவும் இணைந்துள்ளது. வணிகம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் 5 ஐரோப்பிய நாடுகள் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சீனாவுக்கு விசா இல்லாமல் வரலாம் என்று அறிவித்துள்ளது.அதாவது பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் விசா இல்லாமல் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சீனாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த சோதனை திட்டம் வெற்றிபெற்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு விசா இல்லாமல் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “சீன மற்றும் வெளிநாட்டு பணியாளர்களை பரிமாறிக் கொள்வதன் உயர் மட்ட வளர்ச்சிக்கும், வெளிநாட்டவர் சீனா வருவதற்கான கதவுகளை அதிகளவில் திறந்துவிடுவதற்குமான வசதிகளை இது அளிக்கும்” என்று தெரிவித்தார்.