பாகிஸ்தான் அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் 2-வது ஆட்டம் நேற்று ஹால்மில்டனில் உள்ள செட்டான் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலம் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 74 ரன்களைக் குவித்தார். இதில் 5 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும்.
டெவன் கான்வே 20, கேன் வில்லியம்சன் 26, டேரில் மிட்செல் 17, மிட்செல் சான்ட்னர் 25 ரன்கள் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 3 விக்கெட்களையும், அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்களையும், ஆமிர் ஜமால், உசாமா மிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.
பின்னர் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 19.3 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாபர் அஸம் 66 ரன்களும், பகர் ஸமான் 50 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன் சேர்க்கவில்லை.
நியூஸிலாந்தின் ஆடம் மில்ன் 4, டிம் சவுத்தி, பென் சியர்ஸ், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளிடையிலான 3-வது ஆட்டம் வரும் 17-ம் தேதி டுனெடின் நகரில் நடைபெறவுள்ளது.