'அயலான்' கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. ரவிக்குமார் போன்றதொரு தோழரின் வெற்றி எப்போதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. இவ்வேளையில், ஏலியன்கள் குறித்த சிறு சிறு உரையாடல்கள் நடப்பதை பார்க்க முடிகிறது. ஏலியன்கள் குறித்து நம்மிடம் பல்வேறு கதைகள் உண்டு. கடவுளர்கள், தேவதூதர்கள், தேவதைகள், சைத்தான்கள், ராட்சதர்கள், சொர்க்கம், நரகம் போன்ற கற்பனைகளின் இன்பம் போன்றுதான் ஏலியன்கள் குறித்த கதைகளும்.
ஒரே வித்தியாசம்... ஏலியன்கள் உண்மையில் உண்டு. ஆனால், நம்மிடம் அவர்கள் குறித்து உலாவுவது கற்பனைக் கதைகள் மட்டுமே. ஒருவேளை உண்மையில் கடவுள் இருந்தால் தன்னைப் பற்றி மதங்கள் உருவாக்கி வைத்திருக்கும் கதைகளுக்கு எப்படி சிரிப்பாரோ, அப்படித்தான் ஏலியன்களும் நமது கதைகளை பார்த்து சிரிப்பார்கள். ஆனால், அவர்கள் ரொம்ப இளக்காரம் எல்லாம் பண்ணி விட முடியாது. ஏனெனில், அவர்கள் உலகிலும் ஏலியன்கள் (நம்மை) பற்றிய கற்பனைக் கதைகள் உலாவக் கூடும்.
பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் நட்சத்திர தூசு மேகங்கள் அனைத்திலும் உயிர்களுக்கான மூலக்கூறுகள் நிறைந்திருக்கின்றன.
ஆனால், அவை உயிர்களாக வளர, பூமி போன்ற ஒரு கோள் தேவைப்படுகிறது. தனது நட்சத்திரத்தில் இருந்து சரியான தொலைவு, பாதுகாப்பான வளிமண்டலம், விண்கற்கள் மூலம் நீர் வந்து சேர்தல், விண்கற்கள் தொடர்ந்து மோதி அழிவு ஏற்படாமல் இருத்தல்... இந்த நான்குமே நேர்மறை தற்செயல் நிகழ்வுகள். பூமிக்கு இந்த நான்குமே நிகழ்ந்துள்ளது.
வியாழன், சனி போன்ற பெரிய கோள்கள் சூரிய மண்டலத்தில் இல்லாதிருந்தால் என்னவாகி இருக்கும்?
பூமி உயிர்க் கோளாக இருப்பதற்கான சாத்தியம் மிகக் குறைந்திருக்கும். எப்படி?
சூரியனின் ஈரப்புக் குழிக்குள் பூமி சிக்கி இருக்கிறது. அது முழுதாக அந்தக் குழிக்குள் விழுகாதிருக்க, பூமியின் ஈர்ப்பு விசை மட்டும் காரணமல்ல. வியாழன், சனி, நெப்டியூன் போன்ற கோள்களும் தங்கள் ஈர்ப்பு விசையை பூமி மீது செலுத்துகின்றன. சூரியனின் ஈர்ப்பு விசை - பூமியின் சுய ஈர்ப்பு விசை - வியாழன், சனி, நெப்டியூன் கோள்களின் ஈர்ப்பு விசை எல்லாம் சேர்ந்து பூமியை சூரியனிடமிருந்து சரியான தொலைவில் நிறுத்துகின்றன.
ஒருவேளை இக்கோள்கள் இல்லையெனில், பூமி தற்போதை விட, சூரியனிலிருந்து குறைவான தொலைவிலேயே இருந்திருக்கும். அப்படி இருந்திருந்தால் அதீத வெப்பக் கோளாக இருந்து, ஓர் உயிர் கூட ஜனித்திருக்க முடியாது.
அதேபோல் வியாழன் கோள் இல்லையெனில், விண்ணில் சுற்றும் நூற்றுக்கணக்கான விண்கற்களில் சில அவ்வப்போது பூமி மீது மோதி உயிர்களின் பரிணாம வளர்ச்சியைத் தடுத்திருக்கும். வியாழன் கோள் அத்துனை விண்கற்களையும் தன்னகத்தே இழுத்துக் கொண்டுள்ளது.